Saturday, September 27, 2008

லஞ்சம்...லஞ்சம்......அப்பா இப்பவே கண்ணகட்டுதே



லஞ்சம்...லஞ்சம்......அப்பா இப்பவே கண்ணகட்டுதே

குமரி மாவட்டம் மற்றும் கேரளா மாநில எல்லையான களியக்காவிளை சோதனை சாவடியில் நேற்று லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்யும்போது பிடிபட்ட லஞ்ச பணத்தைதான் மேலுள்ள படத்தில் காண்கிறிர்கள். ஒரு நாள் இரவில் கைப்பற்றபட்ட லஞ்சபணம் சுமார் அரை லட்ச ரூபாய், அப்படியானால் வருடத்திற்கு சுமார் நான்கு கோடி ரூபாய்கள். நீங்களே கணக்கு போட்டுக்கொள்ளுங்கள் வருடத்திற்கு இதுபோன்று எத்தனை ஆயிரம் கோடிகள் சுருட்டபடுகிறதென்று.
சோதனை சாவடிகள்
கிராம அலுவலகம்
வட்டாச்சியர் அலுவலகம்......
ஐயோ அம்மா இப்பவே கண்ணகட்டுதே .................

Wednesday, September 24, 2008

கரைந்துவரும் நாஞ்சில் நாட்டிற்கே உரிய பேச்சு தமிழ்



தமிழகத்தின் தென்முனையில் அமைந்துள்ள குமரி மாவட்டத்தின் கலாசாரம் மாற்ற மாவட்டங்களில் இருந்து மிக பெரிய வித்தியாசத்தை கொண்டது, அதுவும் இங்கு பேசப்படும் தமிழின் ஓசை, உச்சரிப்பு, மலையாளம் கலந்த தமிழ், மாற்ற தமிழர்கள் பேசும் தமிழில் இருந்து வித்தியாசபடும் வார்த்தைகள் போன்றவை மிக முக்கியமானவை. நாஞ்சில் நாட்டின் தமிழை மூன்று வகையாக பிரிக்கலாம் குமரி மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் பேசப்படும் தமிழ், மேற்கு பகுதியில் பேசப்படும் மலையாளம் கலந்த தமிழ், மற்றும் கடற்கரை சார்ந்த மீனவ இன மக்களின் தமிழ் (இவர்கள் சற்று ராகத்துடன் பேசுவார்கள்). இம்மாவட்டத்தின் மற்றொரு சிறப்புஅம்சம் தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள ஐந்து வகை நிலங்களாகிய குறுஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலையை மிக குறுகிய நிலபரப்புகுள் உள்ளடக்கியது. மலை, காடு,வயல் வெளிகள், கடல்,மற்றும் குமரி மாவட்டத்தின் கிழக்கு பகுதியின் சிறிய நிலபரப்பு பாலை நிலத்தை ஒத்திருப்பதை காணலாம். நாஞ்சில் நாடு சிறிய மாவட்டமாக இருப்பினும் கல்வியில் முதல் இடத்தை பிடித்து மாற்ற மாவட்டங்களுக்கு முன்னோடியாக விளங்கி வருகிறது. இதனால் இளம் சமுதாயம் மேற்படிப்புக்காக இடம் பெயரும் பொழுது குமரி தமிழில் பேசும் வாய்ப்பு குறைகிறது மற்றும் குமரி மாவட்டத்திற்கே உரிய அரும் கலை சொற்கள் மறைந்து வரும் நிகழ்வை நாம் காணலாம்.

இங்கு நான் குமரி மாவட்ட வட்டார சொற்களை தருகிறேன் உங்களால் புரிந்து கொள்ளமுடியுதா என்று பாருங்கள்.

உறவுமுறைகள்:
மூத்தப்பா - பெரியப்பா
மூத்தம்மா - பெரியம்மா
மச்சினன் - மைத்துனன்
பாட்டா- தாத்தா
மாமாவீடுஅம்மா- அம்மாவோட அம்மா
அய்யா - அம்மாவோட அப்பா
அப்பம்மா - அப்பாவோட அம்மா
கொழுந்தன் - மைத்துனன்
கொழுந்தி - மைத்துனி
அத்தான் - அக்காவோட கணவர்

வீடும் வீடுசார்ந்த பொருள்களும்:
மங்களா - வரவேற்ப்பு அறை
அடுக்களை - சமையல் அறை
அடுப்பங்கரை - சமையல் அறை
அரங்கு வீடு - சேமிப்பு அறை
மட்டுப்பா - மாடியில் உள்ள அறை
தட்டு - மொட்டை மாடி
அசல் - துணி போடும் கொடி
குருன்கட்டி - சிறிய வகை நாற்காலி
வெட்டுகுத்தி - வெட்டுஅருவாள்
பத்தாயம் - நெல் போட்டு வைக்கும் பெரிய பெட்டி
சொளவு - பனை ஓலையால் செயப்பட்ட அரிசி புடைக்கும் பொருள்
பிழாவு - பனை ஓலையால் செயப்பட்ட மாவு காயவைக்கும் பொருள்
உழக்கு - அரிசி அளக்க உதவும் சிறிய அளவை
நாழி - அரிசி அளக்க உதவும் பெரிய அளவை
மரக்கால் - நெல் அளக்க உதவும் பெரிய அளவை
குட்டுவம்- நீர் சேமித்து வைப்பது மற்றும் நெல் அவிக்க உதவுவது
டாங்கி - நீர் சேமித்து வைப்பது மற்றும் நெல் அவிக்க உதவுவது
வார்ப்பு- திருமண வீட்டில் சோறு சமைக்க உதவுவது
சட்டுவம் - பெரிய அகப்பை
சிப்பல் - சோறு பரிமாற உதவுவது
நிலவா - சோறு பரிமாற உதவுவது
ஆப்பை - அகப்பை
அண்டை - அடுப்பு
சட்டாப்பை - தோசை சுட பயன்படும் அகப்பை
சீனி சட்டி- வாணலி
யானம் - பாத்திரம்
சருவம் - சின்ன பாத்திரம்
கிண்ணி -கிண்ணம்
குத்துபோணி - பெரிய பாத்திரம்
தூரை - சிறிய மண்பாண்டம்
கலயம் - கலசம்
ஈக்கான்பெட்டி - பனைஒலையால் செய்யப்பட்ட பெட்டி
உழக்கான்பெட்டி - பனைஒலையால் செய்யப்பட்ட பெட்டி
திருவலை - தேங்காய் துருவி
கறி - குழம்பு
இறைச்சி - கறி
மரக்கறி - காய்கறி
தாள் - காகிதம்
சாரம் - லுங்கி
முண்டு, தோர்த்து - துண்டு
போதப்பு - ஜமுக்காளம்
உள்ளுடுப்பு -பெண்களின் உள்ளாடை
நிக்கர் - அரைக்கால் சட்டை
ஊத்தாம்பட்டி - பலூன்

உடல் உறுப்புகள்:
சுண்டு- உதடு
கொப்புள் - தொப்புள்
கன்னாம்மண்டை - உச்சந்தலை
செவளை - கன்னம்
உப்புகுத்தி - கணுக்கால
பெதடி - பிடரி
கம்புகூடு - அக்குள்
ஈரகொலை -ஈரல்

நோய்கள்:
மண்டகனம்- ஜலதோஷம்
மண்டகுத்து - தலைவலி
சர்த்தல் - வாந்தி
வட்டு - மாத்திரை
தட்டி புளியுதல் - காய்ச்சலுக்கு வீட்டில் தயாரிக்கப்படும் மருந்து
கருக்கு - வயற்று போக்குக்கு வீட்டில் தயாரிக்கப்படும் மருந்து
வயற்று அலற்ச்சல் - வயற்று போக்கு

வாழைபழம்:
பாளயன்கொட்டன்
பேயன் பழம்
ஏத்தம்பழம் - நேந்த்ரன்பழம்
ரசகதலி - ரஸ்தாளி
படத்தி
மட்டி
செந்தொழுவன் - செவ்வாளைபழம்
வெள்ளைதொழுவன்
மொந்தன்பழம்
மோரிஸ் - பச்சை பழம்

காய்கறி:
பெல்லாரி, பெரிய உள்ளி - பெரிய வெங்காயம்
உள்ளி - வெங்காயம்
பூடு - பூண்டு
வழ்தனகாய் - கத்தரிக்காய்
பெரும்சீரகம் - சோம்பு

மரம், மரம்சார்ந்த பொருள்கள்:
நல்லமாவு - மாமரம்
கொல்லமாவு - முந்திரி மரம்
தெங்கு - தென்னைமரம்
பூசணி - பூவரசு
கொல்லான்கொட்டை - முந்திரிகொட்டை
கொல்லாம்பழம் - முந்திரிபழம்
கருன்காய் - இளம் முந்திரி
அண்டி - இளம் முந்திரிகொட்டை
குரும்பல் - குரும்பை
சில்லாட்டை
கொதம்பு
பாளை

மீன் வகைகள்
சாளை - மத்தி
குத்தா
வள மீன்
வாளை
தெரச்சி - வௌவால்
நெத்திலி
பாரை
மொரல்
லூர்து
சீலா - வச்சிரம்
பூச்சி
கிளர்று
கிளாத்தி

பிற வார்த்தைகள்:
பக்கி - வண்ணதுபூச்சி
புட்டான் - தட்டான் பூச்சி
காடல் - கௌதாரி
தாரா - வாத்து
சவுட்டு - உதைத்தல்
சாடுதல் - குதித்தல்
அலைவாய்கரை - கடற்கரை
அத்தம் - கடைசி, இறுதி
விளை - தோட்டம்
தறவாடு - சொத்து
நிசாரம் - சாதாரணம்
தொலி - தோல்
எல்லு - எலும்பு
வீதி - அகலம்
ஊச்சாழி- ரௌடி
பய்ய - மெதுவா
நாணகேடு - கேவலம்
சோக்கேடு - நோய்
வேதனம் - வலி
அண்டை - அடுப்பு
உறைப்பு - காரம்
தெரக்கு - துரத்து
கோரு - முகர்தல்
கீறு - கிழி
கொழை - தழை
நேட்டம் - சம்பாதித்தல்
ஊரல் - சொறி எடுத்தல்
அடியந்தரம், கூட்டுவா, மோட்ச விளக்கு - பதினான்காம் நாள் காரியம்
தறி - வெட்டு
தவுக்கா - தவளை

மாறிவரும் கலாச்சாரம்!


தமிழ்ச்சுவடு: உலகுக்கு நாகரீகம் கற்று கொடுத்த இனம் தமிழினம், இன்று நம்முடைய கலாச்சாரமும், மொழியும் சற்று மெருகிழந்து, வலுவிழந்து வருவதை பார்க்கும்போது இது காலத்தின் கட்டாயமா அல்லது நாகரீகம் என்ற பெயரால் நாமாக ஏற்றுக்கொண்ட நாகரீகத்தின் எச்சமா என்ற பயம்தான் தோன்றுகிறது. பல்லாயிரம் ஆண்டுகள் சிறப்புள்ள நமது கலாச்சாரம் கடந்த இருபது ஆண்டுகளில் சிதிலம் அடைவதற்கு காரணம் என்ன? இந்த இருபது ஆண்டுகளில் நமக்குள் அப்படி என்ன மாற்றங்கள் உண்டாகியது, என் அறிவிற்கு தெரிந்து அழிந்து போன அல்லது அழிந்து கொண்டிருக்கும் நமது சுவடுகளை தேடி..........


தமிழ்:ஆறாயிரம் மொழிகள் பேசப்படும் உலகில் இன்று ஆறு மொழிகளுக்கு மட்டுமே செம்மொழி என்னும் அந்தஸ்து அந்த வரிசையில் என் கன்னி தமிழுக்கும் அந்த பெருமை உண்டு. செம்மொழி என்னும் மணிமகுடம் சூடும் இந்நாளில் என் புறநானுற்று தமிழனின் வாயில் தமிழ் படும் கொடுமையை என்னவென்று சொல்வது.

காணாமல் போன கிராமத்து விளையாட்டுகள்: பசுமையும் பாசமும் பரந்து விரிந்த நம் தமிழக கிராமத்து பால்ய விளையாட்டுகள் முழுமையும் மறைந்து போனதின் முக்கிய பின்னணிகள் பற்றிய சிறு தேடல்.....

எனக்கு இப்பொழுது நினைத்தாலும் எனது பால்ய கால விளையாட்டுகளும் அதனை கற்றுகொண்ட விதமும் என்னை மலைக்க வைக்கிறது. மூன்று அல்லது நான்கு வயதில் என் குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் விளையா டிய " ஊருபத்தி ஈர்பத்தி ஒரியமங்கலம் பருப்பம் சுட்டன பன்னிரண்டு ஆற்றில் சுற்றும் முற்றும் செவந்தியமலை பூதும் பூதும் பட்டணம் புதியராஜா பட்டணம் ஆடும் கன்றும் வாரவேளை காலைமடக்கி தோழி பன்" என்று பாடியபடி கைகளை தரையில் வைத்து விளையாடும் விளையாட்டு் இன்று காணாமல் மறைந்து போயிற்று (சமீபத்தில் ஒரு மலையாள திரைப்படத்தில் காணமுடிந்தது).


நான் பிறந்து வளர்ந்தது தமிழகத்தின் தென்கோடியாம் குமரி முனை அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், அங்கு ஒவ்வொரு பருவகாலதிற்கும் வெவ்வேறு விளையாட்டுகள் உண்டு. குறிப்பாக கிளாச்சி (கோலி), கிளியந்தட்டு, கிளிபாஸ், வாளி விடுதல், பம்பரம், பட்டம், கள்ளன் போலீஸ், தொட்டு விளையாட்டு (நொண்டி), கண்டு விளையாடுதல் (கண்ணாமூச்சி), கல்லா மண்ணா, கௌண்டேஸ் (அமெரிக்கன் பேஸ் பால் போன்றது), சிங்கம்புள் (கிட்டி), பாண்டி, சுட்டி பிடித்தல், பேயன் பந்து, குதிரை போர், கொல்லன்கொட்டை எற ிதல், தாயம் போன்ற விளையாட்டுகளை ஒவ்வொரு நாளும் சாயும்காலம் பள்ளிவிட்டதும் ஊர் மைதானத்தில் நண்பர்களுடன் விளையாடுவோம்.


கடந்த பத்து வருடங்களாக இது போன்ற விளையாட்டுகளை என் கிராமத்தில் பார்த்தது இல்லை. பொதுவாக இன்றைய சிறுவர்கள் பள்ளிவிட்டா ல் நேராக டியுசன் சென்றுவிடுகிறார்கள். வாரவிடுமுறைகளில் கூட அவர்களுக்கு ஓய்வு என்பது கிடைப்பதில்லை அப்படி கிடைத்தாலும் அவர்கள் தொலைக்காட்சி பார்ப்பதிலே பொழுதை கழித்து விடுகிறார்கள்.

இது போன்ற விளையாட்டுகள் அத்தனையும் அழிவதற்கு கிரிக்கெட்டும் ஒரு காரணம் அதையும் தாண்டி தொலைக்காட்சியும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது, இதனால் சீரழியும் இளைஞர் சமுதாயம் திசை மாறி செல்லும் காட்சிகளை நாம் கிராமங்களில் காணலாம் , ஆனால் ஒரே ஆறுதல் இன்றைய மாணவ சமுதாயம் கல்வியில் சிறந்து விளங்குகிறது. கல்வியில் சிறந்து விளங்கினால் மட்டும் மறைந்து போகும் இந்த அரிய விளையாட்டுகளையும், கலாச்சாரத்தையும் மீட்டு கொண்டுவரமுடியாது என்பதுதான் உண்மை.

தமிழில் டைப் செய்ய


View My Stats